தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? – அமைச்சர் விளக்கம்!

Minister Anbil Mahesh informed that the schools will be reopened only after consulting the medical experts regarding the Corona 3rd wave.

கொரோனா 3வது அலை குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பின்போது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 வகையாக தமிழக அரசு பிரித்து கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்திருந்தது.

தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என சிலவற்றுக்கு மட்டுமே தடை தொடர்ந்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகளை திறக்கச் சொல்லி ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா 3வது அலை குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்துக்களே அதிகம் வருகின்றன என்றும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.