சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயல் – டிடிவி தினகரன்.!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் என்று டிடிவி தினகரன் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் என்று டிடிவி தினகரன் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு காரணமாக சில இடங்களில் மட்டும் கடைகளை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனையடுத்து தற்போது பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை நாளை முதல் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும், நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும், முககவசம் மற்றும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் மதுபான கடைகளை நாளை தொடங்குவதை எதிர்த்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது, கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னைக்கு வெளியே ஓரளவுக்கு கட்டுபாட்டில் இருந்த கொரோனா பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்திருந்தும் இப்ப்டியோர் முடிவெடுப்பது துளியும் மனச்சாட்சி இல்லாத செயாலாகும்.

மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும், அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஏற்க முடியாது. எனவே சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்தும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.