ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழப்பு 1,400ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக 1,400 பேர் உயிரிழப்பு அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் ஏராளமானோர் காயம் ஏற்பட்டுள்ளது.

earthquake in Afghanistan

ஆப்கானிஸ்தான் :கிழக்கு பகுதியில், நகங்கர் மாகாணத்தின் ஜலாலாபாத் நகருக்கு அருகே செப்டம்பர் 1, 2025 அன்று நள்ளிரவு ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், 1,400 பேரின் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம், குறிப்பாக குனார் மாகாணத்தில் உள்ள நூர் குல், வாட்பூர், மற்றும் மசார் தாரா கிராமங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. மண் மற்றும் கல் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், 8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதால், அதன் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், காபூல், இஸ்லாமாபாத், மற்றும் இந்தியாவின் டெல்லி வரை உணரப்பட்டன. பல மணி நேரங்களுக்கு பிறகு ஏற்பட்ட 4.5 மற்றும் 5.2 ரிக்டர் அளவிலான அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், மக்களிடையே பீதியை மேலும் அதிகரித்தன.

மலைப்பாங்கான பகுதிகளில் சாலைகள் அழிந்து, நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், மீட்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குனார் மாகாணத்தின் மசார் தாரா மற்றும் வாடிர் கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், 90% மக்கள் உயிரிழந்த அல்லது காயமடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ஜலாலாபாத் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் மருத்துவ வசதிகள் மற்றும் மீட்பு குழுக்கள் போதுமானதாக இல்லை. “குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உடனடி உதவி தேவை,” என்று நூர் குல் கிராமவாசி ஒருவர் வேதனையுடன் கூறினார். தலிபான் அரசு, அனைத்து வளங்களையும் பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த பேரழிவு, ஆப்கானிஸ்தானின் ஏற்கனவே நிலவும் பொருளாதார நெருக்கடி, புலம்பெயர்ந்தோர் திரும்புதல், மற்றும் வறட்சி பிரச்னைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. ஐ.நா. மற்றும் பிற நாடுகளின் உதவி அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவிகளை அனுப்பி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.