மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை -அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

Biden announces sanctions against Myanmar’s military leaders, targets generals with asset freeze

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி ,அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட  தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தது ராணுவம்.மேலும் மியான்மரில் உள்ள ஆங் சான் சூச்சி ,அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தேர்தல் முறையாக நடைபெற்ற பின்னர் ஆட்சி திரும்பி அளிக்கப்படும் என்று ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் இணைய சேவைகளும் அங்கு முடக்கப்பட்டுள்ளது.மியான்மரில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் ,உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன்,மியான்மரில் ஆட்சியை கவிழ்த்த தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி ,அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட  அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இராணுவத்தை வலியுறுத்தியுள்ளார். இராணுவம் அதிகாரத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.