காசா :கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மக்கள் மீது காசா நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தான் யாஹியா சின்வர். அவரை பிடிக்க இஸ்ரேல் ராணுவம் முயற்சித்த போது, சின்வர் தப்பித்து விட்டார். இதனால், அவரை உயிரோடு அல்லது பிணமாக மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் அப்போது தெரிவித்திருந்தது.
இப்படி இருக்கையில், நேற்று முன்தினம் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு கட்டிடம் அருகே சென்றபோது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால், எதிர் தாக்குதலாக அந்த கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவம் டேங்க் குண்டு வீசி தகர்த்தது.
அதில், எதிர்பாராத விதமாக கட்டிடத்திலிருந்த ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் உயிரிழந்துள்ளார். இதனை, இஸ்ரேல் பிரதமர் நெதென்யாகு உறுதி செய்து செய்தி வெளியிட்டிருந்தார். மேலும், அவரது உயிரிழப்பு குறித்த எந்த ஒரு தகவலும் ஹமாஸ் அமைப்பு அப்போது தெரிவிக்கவில்லை.
இதனால், ஒரு சிலர் அவர் உயிரிழக்கவில்லை எனவும் இஸ்ரேல் தவறான செய்தியை சொல்கிறது எனவும் கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தரப்பில் இருந்து டிரோன் மூலம் பதிவான சின்வரின் கடைசி நிமிட காட்சிகள் அடங்கிய வீடியோ, மற்றும் இறந்த யாஹியா சின்வரின் புகைப்படங்களை வெளியிட்டது.
அதிலும் குறிப்பாக அந்த வீடியோவில், ‘டேங்க் குண்டு வீசி தகர்த்த அந்த கட்டிடத்தின் உள்ளே யாரேனும் உள்ளனரா? என டிரோன் மூலம் இஸ்ரேல் ராணுவம் பார்வையிட்டது. அப்போது, அங்குள்ள ஒரு சோஃபாவில் அமர்ந்தபடி, ஒரு வயதான நபர் தனது முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தார். அவர் அருகே அந்த டிரோன் சென்ற போது கையில் இருந்த ஒரு குச்சியை அந்த டிரோன் மீது வீசியிருப்பார்’.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த கட்டிடத்தின் மீது குண்டுகள் வீசி தாக்கியது இஸ்ரேல் ராணுவம். அதில், அந்த நபர் உயிரிழந்தார், அதன்பின், அவர் யாஹியா சின்வர் தான் என பயோமெட்ரிக் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதன் பிறகு, ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் உயிரிழந்ததை ஹமாஸ் அமைப்பு நேற்று உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
unknown node