ராய் புயல் – பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு எண்ணிக்கை 208 ஆக உயர்வு!

The death toll from Typhoon Roy, which hit the Philippines, has risen to 208.

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ’ராய்’ புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ‘ராய்’ என்ற சக்தி வாய்ந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கி, ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசியதால், அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயங்கர புயலை அடுத்து மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் ராய் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. ராய் சூறாவளியால் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை சேதப்படுத்தியதில் குறைந்தது 239 பேர் காயமடைந்தனர் மற்றும் 52 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இது சமீபத்திய ஆண்டுகளில் நாட்டைத் தாக்கிய மிக மோசமான புயல்களில் ஒன்றாகும். ராய் புயல் நாட்டை தாக்கியதால் 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.