ஜப்பான் நாட்டின் அட்டாமி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், 80 பேரை காணவில்லை.
ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தின் தென்மேற்கில் 100 கி.மீ. தொலைவில் அட்டாமி என்ற கடலோர நகரம் உள்ளது. இந்த இடத்தில் 215 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜப்பான் நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு அபாயம் குறித்தும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனையடுத்து, அட்டாமி நகரத்தை ஒட்டி இருந்த மலையடிவாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகளையும், அங்கிருந்த கார் போன்ற வாகனங்களையும் அடித்து சென்றது.
அதில் பலர் சிக்கிக்கொண்டனர். இதில் காணாமல் சென்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் களமிறங்கினர். இதுவரை இந்த நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22 பேரை மீட்டுள்ளனர். 80 பேர் காணாமல் போய் உள்ளனர். தற்போது இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.