மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!

மியான்மர் நாட்டில் உள்ள மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டில் உள்ள மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மண் குவியல் தொழிலாளர்கள் மீது விழுந்தது. அந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அங்கு மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

அந்த விபத்தில் இதுவரை 50 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இடிபாடுகளில் இருந்து பலரையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து கூறுகையில், அந்த பகுதியில் ஏற்கனவே கனமழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள நிலப்பகுதி ஈரமாக இருந்த காரணத்தினால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.