டிரம்ப் நிர்வாகம் புதிய நிர்வாகத்திற்கு முழுமையான தகவல்களை வழங்க மறுக்கிறது – ஜோ பைடன் குற்றசாட்டு!

Joe Biden, has accused the Trump administration of refusing to provide complete information to his team in various fields.

பல்வேறு துறைகளில் ட்ரம்பின் நிர்வாகம் தங்களது குழுவினருக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டிரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர் ஏற்கனவே ட்ரம்பின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவர் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தற்பொழுது இதுகுறித்து பேசியுள்ள புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ட்ரம்ப் நிர்வாகம் தங்களது குழுவினருக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதாகவும், டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்காவின் பல்வேறு துறைகளை சீரழித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளின் புதிய நிர்வாகத்திற்கான தகவல்களை வழங்க மறுப்பது பொறுப்பற்ற செயல் எனக் கூறிய ஜோ பைடன், தங்களுக்கு அரசியல் தலைமைகளால் இடையூறு கொடுக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

மிக மோசமான நிலையில் நாட்டின் பல்வேறு துறைகள் இருப்பதாகவும், திறமையான பல ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், பல துறைகளில் அரசு சீர்கேட்டை உருவாக்கி வைத்திருப்பது விரக்தியை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிரி நாடுகளை சமாளிக்க தேவையான திட்டங்களை வகுப்பதற்கு முந்தைய அமெரிக்காவின் அரசு முழுமையான தகவல்களை கொடுக்க வேண்டும், ஆனால் இதுவரை பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் குறித்த தெளிவான தகவல் கூட கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.