ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

President Joe Biden has warned that another terrorist attack could take place against Kabul airport in the next 24-36 hours.

அடுத்த 24-36 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்திற்கு எதிராக மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 15க்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் 100க்கு மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

காபூல் விமான நிலையம் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியவர்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 26 அன்று காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா ட்ரான்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

நங்கர்ஹார் மாகாணத்தில் அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் கோரசான் தீவிரவாதி அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய, ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள நிலைமை ஆபத்தானது என்றும் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அட்டாக்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது எனவும் கூறினார். அடுத்த 24-36 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்திற்கு எதிராக மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று எங்கள் தளபதிகள் தகவல் தெரிவித்ததாக ஜோ பைடன் தனது தேசிய பாதுகாப்பு குழுவை சந்தித்த பிறகு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படைக்கு முன்னுரிமை அளிப்பதற்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நான் அவர்களுக்கு உத்தரவிட்டேன். அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களும், திட்டங்களும் பாதுகாப்பு படையிடம் இருப்பதை உறுதி செய்தேன் என தெரிவித்து, ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தொடருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.