சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்...!

An Assam Congress MLA has been suspended from the party for allegedly speaking out.

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போல கடந்த 1979 – 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காள தேசத்துக்கு மக்கள் வெளியேறுமாறு போராட்டம் நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது சிபஜ்கர் பகுதியில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் 8 பேரை கொலை செய்ததாக ஆளும் பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் சிலர் கூறியுள்ளனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய அசாம் மாநிலத்தின்  காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷர்மன் அலி அகமது அவர்கள், சிபஜ்கர் பகுதியில் வசித்து வந்த சிறுபான்மையினர் மீது அந்த 8 பேரும் தாக்குதல் நடத்தினர்.

எனவே, தங்களை தற்காத்துக் கொள்ள தான் அப்பகுதியில் வசித்து வந்த இஸ்லாமிய மக்கள் அந்த எட்டு பேர் மீதும் தாக்குதல் நடத்தினர். எனவே 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பேரும் தியாகிகள் அல்ல, அவர்கள் கொலைகாரர்கள் என அவர் கூறியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இவர் மீது பாஜக, மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கடந்த 2 ஆம் தேதி எம்.எல்.ஏ ஷர்மன் அலி அகமது அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷர்மன் அலியை 2 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டு நிலையில், எம்.எல்.ஏ. ஷர்மன் அலி நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ ஷர்மன் அலி அகமது அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சி  நெறிமுறைகளுக்கு மாறாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்ததால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அசாம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்...!