கனவு கண்டவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார் – பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

BJP state president L Murugan has welcomed the announcement of Sasikala's withdrawal from politics.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் பெங்களூரிலிருந்து தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அவரை வரவேற்க வந்த தொண்டர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். இதனால் அரசியல் களம் இந்த முறை அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா திடீரென நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும் என்றும் நம்முடைய பொது எதிரி தீயசக்தியை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்று அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார் என திமுக தலைவர் முக ஸ்டாலினை சுட்டிக்காட்டியுள்ளார். பெங்களூரில் இருந்து புறப்பட்டு விட்டார் என்றும் இனி நடக்க வேண்டியது நடக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.