#BREAKING: முதல்வர் பழனிசாமியிடம் மன்னிப்பு கோருகிறேன் – திமுக எம்.பி.ஆ.ராசா

"I apologize for the criticism of Chief Minister Palanisamy," DMK MP A. RASA told reporters.

முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மன்னிப்பு கோருகிறேன் என திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, முதல்வர் பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தன.

அதிமுக தரப்பிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது.

பின்னர் திமுக எம்பி ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, நேற்று பிரச்சாரத்தின் போது முதல்வர் பழனிசாமி, என் தாயை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள் என்று குற்றசாட்டினார். மேலும் தன் தாயை பற்றி குறிப்பிடும்போது உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் கண்ணீர் மல்க முதல்வர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து  மன்னிப்பு கோருகிறேன் என திமுக எம்பி ஆ.ராசா நீலகிரியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். என் பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் கண்கலங்கியதால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முதல்வர் கண்கலங்கினார் என்பதை கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் சித்தரிக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக அடிமனதிலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன். எனது பேச்சால் முதல்வர் உள்ளபடியே காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எனது பேச்சு இரு தலைவர்களை பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அல்ல, இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பிடும் ஒப்பிடும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்..

எனது பொது வாழ்வில் இது ஒரு கரும் புள்ளியாக இருந்துவிட கூடாது என்றும் நான் ஒரு பொறுப்பில் இருக்கிறேன், முதல்வர் கண்கலங்கிய செய்தியை அறிந்ததும் நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆகையால், மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.