பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக காவல்துறை சிறப்பு DGP ராஜேஸ்தாஸை முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. திரு. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் திரு. பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும் – அ.தி.மு.க.வினரையும் பாதுகாக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, பெண்ணினத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு முதலமைச்சர் உருவாக்கியுள்ள இந்த இழி நிலையைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.எனவே, பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து – சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. திரு. ராஜேஸ்தாஸை சஸ்பெண்ட் செய்து – கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இதுபோன்ற போலீஸ் அதிகாரியைப் பாதுகாத்து தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண் போலீசார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்க முயற்சித்தால் – திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
unknown node