வைகோ மீதான வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு....!

High Court orders cancellation of the case against Vaiko

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கை ரத்து செய்து,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக நிர்மலாதேவி குறித்து நக்கீரன் இதழில் வெளியான செய்தியில் ஆளுநரையும் இணைத்து  அவதூறு பரப்பியதாகவும்,ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு,2018ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அவர் கைதும் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 124 பிரிவின் கீழ் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவிக்கவே,அன்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கிடையில் அவர் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்க முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்தனர்.இதனால்,வைகோ அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனையடுத்து,அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, போக்குவரத்தை முடக்கியது ஆகிய பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைகோ அவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து,இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எம்.எல்.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே,இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் அவர்கள்,வைகோ மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.