செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு தொடர்பான வழக்கில் இரு தரப்பு வாதங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிறைவு பெற்றுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைதுசெய்ததில் விதிமீறல்கள் இருப்பதாக செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உய்ரநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து இருந்தார். முதலில் இந்த மனு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது , இரு நீதிபதிகளும் மாறுபட்டதீர்ப்பை வழங்கினர்.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கை 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்றி சென்னை உய்ரநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, நீதிபதி கார்த்திகேயன் தலைமையிலான அமர்வு முன்பு செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு விசரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை விதிகளை பின்பற்றி கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும், புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்றும் அதனால் அவரை நீதிமன்ற காவலில் இருந்து விடுக்கவேண்டும் என பல்வேறு வாதங்களை முன் வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதில் வாதங்களை அமலாக்கத்துறையும் முன் வைத்தது. கைது செய்யும் போது கொடுக்கப்படும் ஆதாரங்கள் முதற்கட்ட தகவல்கள் மட்டுமே என்றும், அதனை கொண்டு முழு முழுதாக இவர்தான் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாது என்றும், விசாரணையின் போதுதான் முழு ஆதாரங்களும் கிடைக்கும். மேலும் ஆதாரங்கள் அடிப்படையில் புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு என அமலாக்கத்துறை வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களும் இன்று நீதிமன்றத்தில் முழுதாக சமர்க்கப்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் இன்றே தீர்ப்பை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அநேகமாக பிற்பகலில் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான முக்கிய தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
