வேதா இல்லம்-அதிமுக மேல்முறையீடு..!

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். இந்த இல்லம்  அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இதனை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார். பின்னர், வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.