தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?
பணிச்சுமை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால், முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஆகியோர் இந்த தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள்.
எனவே, அவர்கள் இல்லாத சூழலில் அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருந்தது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பீல்டிங்கில் சற்று இந்தியா சொதப்பியது. இதுவும் தோல்விகளுக்கு ஒரு சில முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. முதல்போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் இந்தியா கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில் அவர்களுக்கு அதிர்ச்சி குண்டை போடும் வகையில் 2-வது போட்டியில் பும்ரா விளையாடமாட்டார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏனென்றால், பணிச்சுமை அதிகமாக இருப்பதால் அவருக்கு 2-வது போட்டியில் ஓய்வு அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தொடர்ந்து உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது வீரர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த ஓய்வு முடிவு, இந்திய அணியின் பந்துவீச்சு உத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். பும்ராவின் இடத்தை நிரப்புவதற்கு, முகமது சிராஜ், அல்லது இளம் வேகப்பந்து வீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இது இளம் வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்கும் விஷயமாக இருந்தாலும் பும்ரா இல்லாதது அணிக்கு ஒரு பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் அவர் விளையாடுவாரா அல்லது பரவும் தகவல் பொய்யான தகவலா? என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.