மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!
மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பதால் மாற்று வீரர்களை இணைக்க அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இணைக்க அணி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பிசிசிஐ ஒரு வார கால இடைநீக்கத்தை அறிவித்த பிறகு, ஐபிஎல் 2025 மே 17 அன்று மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த திங்களன்று, இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு புதிய அட்டவணையை அறிவித்தது. புதிய தேதிகளின்படி, போட்டி மே 25 க்கு பதிலாக ஜூன் 3 அன்று முடிவடையும்.
மாற்றப்பட்ட தேதிகளுக்குப் பிறகு, மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க பல வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வருகின்றனர். அதே நேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட சிலர் விலகியுள்ளனர்.
இந்நிலையில், இப்பொது இணைக்கப்படும் வீரர்கள் நடப்பு சீசனில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர் என்றும், ஒத்திவைப்புக்கு பிறகு மாற்று வீரர்களாக அணியில் சேர்ந்தவர்களை அடுத்தாண்டு தக்கவைக்க முடியாது. அவர்கள் 2026 ஐபிஎல் தொடரில் விளையாட தகுதியற்றவர்களாகவே கருதப்படுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.