Syed Mushtaq Ali: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி.!

Tamil Nadu has advanced to the final of the Syed Mushtaq Ali Cup after beating Rajasthan

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

சையது முஷ்டாக் அலி தொடர் போட்டிகள் கடந்த ஜனவரி 10-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி, ராஜஸ்தான் அணியுடன் இன்று அரையிறுதியில் விளையாடியது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டை இழந்தாலும் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக முதல் 10 ஓவர்களிலேயே 100 ரன்களுக்கும் அதிகமாக எடுத்திருந்தது. ராஜஸ்தான் கேப்டன் அசோக் மேனரியா அதிரடியாக விளையாடி 51 ரன்கள் எடுத்தார். ஆனால், இறுதியில் ராஜஸ்தான் அணி ரன் எடுக்க முடியாமல் சுருண்டது. குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டை இழந்தது.

தமிழ்நாடு அணியில் எம் முகமது 4 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஹரி நிஷாந்த் 4, பாபா அபராஜித் 2 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். ஆனால், என் ஜெகதீசன் நிதானமாக விளையாடி 28 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் அருண் கார்த்திக் – தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக விளையாட தொடங்கியது. அருண் கார்த்திக் 54 பந்தில் 89 ரன்கள் எடுத்தார். அதேபோல் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இருவரின் அதிரடியால், 18.4 ஓவரில் 158 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.