“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி.

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின், இளம் வீரர்கள் வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
14 வயதில் உலக கிரிக்கெட்டை வாய் பிளக்க வைத்த விவசாயி மகன் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். 13 வயதில் ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற மிக இளம் வீரர் என்ற பெருமையை இவர், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அறிமுகப் போட்டியில், வைபவ் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்து, ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அன்றைய தினம் அரை சதம் அடிக்க முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் கண்ணீர் மல்க பெவிலியன் திரும்பியது ரசிகர்களின் மனதை உருக்கியது. ஆனால், விட்டதை டபுள் மடங்காக பிடிக்கும் வகையில், நேற்றைய தினம் போட்டியில் இளம் வயதில் பல சாதனைகள் படைத்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
14 வயதில் பல சாதனை
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இந்தியர், அதிவேகமாக சதம் விளாசியவர், குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருதை வென்றவர் உள்ளிட்ட சாதனைகளை ராஜஸ்தான் அணி 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் விளாசினார்.
10 வயதிலே தீவிர பயிற்சி
இவர், தனது 10 வயது இருக்கும் பொழுது அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது தன் வீட்டு மொட்டை மாடியில் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A 10 yr old Vaibhav Sooryavanshi practicing on his terrace during the lockdown in 2021
4 years later, becomes the second fastest IPL centurion ❤️🙏#IPL2025 pic.twitter.com/fGdNMGyskA
— Vinesh Prabhu (@vlp1994) April 28, 2025
அதிவேக சதமடித்து அசத்திய வீரர்கள்
ஐபிஎல் தொடரில் அதிவேகத்தில் சதமடித்து பலர் சாதனை படைத்துள்ளனர். நேற்று ‘இளஞ்சிங்கம்’ வைபவ் சூர்யவன்ஷி அதிரடி காட்டியதால் அந்த பட்டியலை சற்று புரட்டிப் பார்க்கலாம். இதில், 30 பந்துகளில் சதமடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வைபவ் சூர்யவன்ஷி (35), யூசுஃப் பதான் (37), டேவிட் மில்லர் (38), ஹெட் (39), பிரியன்ஷ் ஆர்யா (39), அபிஷேக் சர்மா (40) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.