பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது.
பல நாடுகளில் மிகவும் பிரபலமாகவுள்ள கிரிப்டோகரன்சி (Crypto Currency),சமீபத்தில் இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது.காரணம்,பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் ஏராளமான மக்கள் முதலீடு செய்கிறார்கள்.
இந்நிலையில்,கூகுள் (Google) தனது பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை நீக்கியுள்ளது.ஏனெனில், கிரிப்டோகரன்சி செயலி என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தீங்கு விளைவிக்கக்கூடிய தீம்பொருள்களை நிறுவி உங்கள் பணத்தைச் சுரண்டக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே,இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக அதனை நீக்குமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ அறிக்கையின்படி, ‘இந்த செயலிகள் விளம்பரங்களைக் (Ads) காட்டி சந்தா சேவையை (Subscription Service) வசூலிப்பதன் மூலமும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதன் மூலமும் பயனர்களிடம் மோசடி செய்வதாக கண்டறிந்தது.இந்த செயலிகளில் சந்தா சேவைகளுக்காக மாதத்திற்கு சராசரியாக ரூ .1,115 ($ 15) செலுத்த வேண்டும்,மேலும்,இந்த பணம் செலுத்தப்பட்டவுடன், பயனர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பின்னர் அவர்களது கணக்கில் இருக்கும் பணம் திருடப்பட்டுள்ளதாக ட்ரெண்ட் மைக்ரோ,கூகுள் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,8 ஆபத்தான செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது.மேலும்,கூகுள் நிறுவனம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தும் இந்த ஆபத்தான ஆப்ஸ்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது..இந்த 8 ஆபத்தான செயலிகளின் பெயர்:
BitFunds – Crypto Cloud Mining
Bitcoin Miner – Cloud Mining
Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
Crypto Holic – Bitcoin Cloud Mining
Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
Bitcoin 2021
MineBit Pro – Crypto Cloud Mining & btc miner
Ethereum (ETH) – Pool Mining Cloud.
மேலும், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் 120-க்கும் மேற்பட்ட போலி கிரிப்டோகரன்சி செயலிகள் இன்னும் ஆன்லைனில் கிடைக்கின்றன என்றும்,இதனால்,கடந்த ஜூலை 2020 முதல் ஜூலை 2021 வரை உலகளவில் 4,500க்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.