டெல்லி : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளைக் கண்டித்து 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) முன்னெடுத்து வரும் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தை இன்று நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப் போவதாக CJP அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று அமைப்பினர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆதரவாக கடந்த 26 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல கல்வியாளர் மற்றும் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்து மேற்கொண்ட நீண்ட கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார்.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது மற்றும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது போன்ற மத்திய அரசின் உறுதிமொழிகளை அடுத்து அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.

மறுபுறம், மாணவர்களின் இந்த எழுச்சி மற்றும் நாடு முழுவதிலும் எதிரொலிக்கும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்துத் தனது தரப்பு விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான புதிய கடுமையான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டரை மாத காலக்கட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாகப் பல அதிரடியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போதிலும், கல்வி அமைச்சரின் ராஜிநாமா மற்றும் நீட் தேர்வு முறை சீரமைப்பு உள்ளிட்ட இதர முக்கியக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை CJP அமைப்பின் தலைமையில் நடைபெறும் அமைதியான வழிவிலான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட தலைவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.