'சத்யஜித் ரே விஞ்சிய மாரி செல்வராஜ்'.. வாழை பார்த்து வியந்து போன பாரதிராஜா.!

சென்னை : மாரி நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் என்று 'வாழை' படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

Bharathiraja was amazed to see the Vaazhai

சென்னை :மாரி நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் என்று ‘வாழை’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் நேற்றயை தினம் ரிலீசானது. இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பொன்வேல் எம், ரகுல் ஆர், கலையரசன், நிகிலா விமல், ஜே சதீஷ் குமார், திவ்யா துரைசாமி மற்றும் ஜானகி ஆகியோர் நடித்துள்ளனர்.

வறுமை காரணமாக பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்கும் குழந்தைப் பருவம், சமூக ஏற்றத்தாழ்வு என கூலி வாழ்வின் ரணத்தை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், நடிகர்களின் எதார்த்த நடிப்பும் படம் பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவைக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு, தமிழ் சினிமா நடிகர்கள் முதல் இயக்குனர்கள் என பலரும் பாராட்டினர்.

தற்பொழுது, மூத்த இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா பாராட்டு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பாரத்து யோசித்தது உண்டு. ‘வாழை’ அப்படியொரு படம்.

படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம். சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன் ” என்று வியந்து பேசிருக்கிறார்.