கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!
தமிழை, கன்னட மொழியின் தாய் என கூறுவதை ஏற்க முடியாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு தெரிவித்துள்ளார்.

கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கமல்பேசிய விஷயம் தான் தற்போது அரசியல் வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே கமல்ஹாசன் பேசியிருந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும் போது கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார். இது தற்போது கன்னட அமைப்புகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
ஒரு பக்கம் தமிழக அரசியல் தலைவர்கள் கமல்ஹாசன் பேசியது சரி தான் என ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். ஆனால், கன்னட அமைப்பினர் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பான் இந்தியன் படமான ‘தக் லைஃப்’-க்கு இது பெரும் சிக்கலாக மாறியுள்ளது. அந்த வகையில், கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்க மாட்டோம், கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” கமல்ஹாசனுக்கு நாங்கள் 24 மணி நேரம் தருகிறோம். நாளைக்குள் அவர் நிச்சயமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நிச்சயமாக தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது. தமிழை, கன்னட மொழியின் தாய் என கூறுவதை ஏற்க முடியாது.
எனவே, கமல்ஹாசன் இந்த விவகாரம் குறித்து என்ன விளக்கம் இது பற்றி சொன்னாலும் ஏற்க மாட்டோம், கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு அறிவித்துள்ளார். எனவே, கமல்ஹாசன் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.