வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!
கேரளா - ராப் இசை பாடகர் வேடன் மீது இளம்பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி, வேடன், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 2021 முதல் 2023 வரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்தாரர், வேடனின் ரசிகையாக இருந்தவர், சமூக ஊடகங்கள் மூலம் அவருடன் தொடர்பு கொண்டதாகவும், 2021-ல் கோழிக்கோடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் சந்திப்பின் போது முதல் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், கேரளாவின் பல இடங்களிலும், வெளிமாநிலங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 376(2)(n) பிரிவின் கீழ் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொச்சி காவல்துறையின் உதவி ஆணையர் ஷிஜு பி.எஸ்., வழக்கு பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தி, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புகார்தாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை சேகரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
வேடனை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம், கேரளாவில் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது. வேடனின் ரசிகர்கள் மத்தியில் இந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புகார்தாரர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவருக்கு தேவையான உளவியல் ஆதரவு வழங்கப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.