முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்..!

Sakthi Masala donates Rs.5 crore to Chief Minister's Corona Relief Fund.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா பேரிடரை தமிழகம் எதிர்கொள்ளவதற்கு தங்களால் முடிந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து,முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஏழை மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியுள்ளது.

மேலும்,இதுகுறித்து சக்தி மசாலா நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர்கள் பி.சி.துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி,ஆகியோர் தெரிவித்துள்ள அறிக்கையில்,”ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையிலும் சக்தி மசாலா பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது.அதைப் போலவே,இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் கொரோனா நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும்,தமிழகத்தில் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள அனைவரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி,சக்தி மசாலா நிறுவனம் சார்பில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு மே 15 ஆம் தேதியன்று வங்கி மூலமாக ரூ.5 கோடி அனுப்பப்பட்டுள்ளது.இதைப் பெற்றுக் கொண்ட முதல்வரும் எங்கள் நிறுவனத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,வருவாய்துறை,சுகாதாரத்துறை, காவல் துறை, தொழிலாளர் துறை, உணவு வழங்கல் துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, செவிலியர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், மருத்துவர்கள், தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு ,பகல் பாராமல் பணிபுரிந்து வருவதற்கு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் வணக்கத்தையும் நன்றியையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,கொரோனா வைரஸானது கூடிய விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு,பொதுமக்கள் அனைவரும் நலமுடன் வாழ சக்தி மசாலா நிறுவனம் இறைவனிடம் வேண்டுகிறது” என்று கூறினர்.