“ஜூலை 1 முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் இருக்கானும்”…ரயில்வே அமைச்சகம் உத்தரவு!
IRCTC கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெல்லி : இந்திய ரயில்வே துறை, ஜூலை 1, 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரத்தைக் கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, நீங்கள் IRCTC இணையதளத்திலோ அல்லது ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரிலோ டிக்கெட் எடுக்க, உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். இது, தட்கல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தட்கல் டிக்கெட்டுகள் குறைந்த நேரத்தில் விற்றுவிடுவதால், சில தரகர்கள் இதைப் பயன்படுத்தி, டிக்கெட்டுகளை மொத்தமாக பதிவு செய்து, பின்னர் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், சாமானிய பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது கடினமாக உள்ளது. ஆதார் அட்டை மூலம், ஒருவர் ஒரு முறை மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்று ரயில்வே உறுதி செய்யும். இது மோசடிகளைக் குறைத்து, முன்பதிவு முறையை நியாயமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IRCTC இணையதளத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க, உங்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு முன்பதிவை உறுதி செய்ய வேண்டும். ஒரு ஆதார் எண்ணை வைத்து ஒரு மாதத்தில் அதிகபட்சம் நான்கு டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்ய முடியும். முன்பதிவு கவுண்டரில், ஆதார் அட்டையைக் காட்டி, கைரேகை அல்லது கண் ஸ்கேன் செய்ய வேண்டும். ஆதார் இல்லையென்றால், தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது.
இந்த விதி தரகர்களைத் தடுக்க உதவும் என்று பலர் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது ஆதார் இணைப்பில் சிக்கல் உள்ளவர்களுக்கு இது பிரச்னையாக இருக்கலாம். கிராமங்களில் ஆதார் ஸ்கேன் செய்யும் வசதிகள் குறைவாக இருப்பதும் ஒரு கவலை. ரயில்வே துறை, இதை எளிதாக்க உதவி மையங்கள் தொடங்கவும், பயணிகளுக்கு விளக்கவும் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.