ஊரடங்கின் போது முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், கடந்த மே மாதம் 25-ஆம் தேதி உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டன. இதனிடையே, பொதுமுடக்கத்தை பற்றி அறியாததால் விமான டிக்கெட்டுகளை பலரும் முன்பதிவு செய்து வாங்கி இருந்தனர். அந்த டிக்கெட்டுகளுக்கு பலனில்லாமல் போனது. டிக்கெட் பணத்தை விமான நிறுவனங்கள் இதுவரை திரும்ப வழங்காமல் உள்ளன.
இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயண சீட்டுத் தொகையை முழுமையாக திருப்பி அனுப்பக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஊரடங்குக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணசீட்டுக்கான தொகை சம்பந்தப்பட்ட பயணிகளின் பெயரில் வரவுகணக்கில் வைக்கப்படும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது. இதனை பயணிகள் 2021 மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் இதில் அடங்கும் என குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து தேவை பிரிவு (DGCA)முடிவெடுக்கும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.