காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக கவுன்சிலர் உயிரிழப்பு!

BJP municipal councilor Rakesh Pandita Somnath has been killed in a terrorist attack in Kashmir.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் ராகேஷ் பண்டிடா சோம்நாத் அவர்கள் உயிரிழந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் அவ்வப்போது அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ட்ரல் நகராட்சியின் கவுன்சிலராக செயல்பட்டு வந்தவர் தான் பாஜக கட்சியை சேர்ந்த ராகேஷ் பண்டிடா சோம்நாத். இவர் ஸ்ரீநகரில் போலீசாரின் பாதுகாப்புடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ராகேஷ் தனது நண்பரான முஸ்டக்யூ பட் என்பவரை சந்திப்பதற்காக ட்ரல் நகருக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாஜக கவுன்சிலர் தனது பாதுகாப்பிற்காக போலீசார் ஒருவரையும் கூட அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ட்ரல் நகரில் உள்ள தனது நண்பர் முஸ்டக்யூ வீட்டில் இருந்த பொழுது துப்பாக்கியுடன் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் சோம்நாத் மற்றும் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் சோம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் முஸ்டக்யூ மகளுக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சோம்நாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் துப்பாக்கி சூடு நடந்த பகுதியையும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளையும் தேடி வருகின்றனர்.