கேரளாவில் தொடரும் மழை... PSC தேர்வுகள் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக ஆகஸ்ட் 4, 5, 6 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அனைத்து PSC ஆன்லைன் மற்றும் OMR தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Hero Image

கேரளம் : மாநிலத்தில் தொடரும் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை நிலவரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அம்மாநிலத்தின் வட மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, காசர்கோடு மாவட்டத்தின் பையார் பகுதியில் அதிகபட்சமாக 121.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளதுடன், அதே மாவட்டத்தின் முலியார் பகுதியில் 81 மி.மீ.-ம், கண்ணூர் விமான நிலையப் பகுதியில் 74 மி.மீ.-ம், கோழிக்கோடு உரும் பகுதியில் 65 மி.மீ.-ம் மழை பதிவாகியுள்ளது. மேலும், கண்ணூர் செருவஞ்சேரி மற்றும் காசர்கோடு ஆர்.ஏ.ஆர்.எஸ். பிலிகோடு பகுதிகளில் தலா 59.5 மி.மீ.-ம், எர்ணாகுளம் நேரியமங்கலத்தில் 59 மி.மீ. அளவிலும் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழையின் தீவிரமும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, தேர்வர்கள் பாதுகாப்பாகத் தேர்வு மையங்களை வந்தடைவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்திற்கொண்டு தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஆகஸ்ட் 4, 5, 6 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அனைத்து கேரளா பி.எஸ்.சி. (Kerala PSC) ஆன்லைன் மற்றும் ஓ.எம்.ஆர். (OMR) தேர்வுகள் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கேரளா அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட தேதிகள் குறித்த விவரங்கள், மாநிலத்தின் வானிலை மற்றும் சூழல் முழுமையாகச் சீரடைந்த பிறகு பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.