காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர்:2-நாள் பொது முடக்கம் போடலாமா? – உச்சநீதிமன்றம் கண்டனம்

Capital choked with air pollution: Can a 2-day general lockdown? - Condemnation of the Supreme Court!

டெல்லி:தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரண்டு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக புகை மூட்டத்தில்(காற்று மாசுபாட்டில்) மூழ்கியுள்ளது.இதனால்,வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.அங்கு நிலவும் காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது.இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி நிற்கிறது.டெல்லியில் காற்றை சுவாசிப்பது என்பது “ஒரு நாளைக்கு 20 சிகரெட்” புகைப்பது போன்றது என்று கூறப்படுகிறது.

இதற்கு அண்டை மாநிலங்களில் எரிக்கும் விவசாயக் கழிவுகள், அதிக வாகன பயன்பாடு மற்றும் நெரிசல் ஆகியவை காரணமாக இருந்து வருகிறது.

இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நீதிபதிகள் கூறியதாவது:

“டெல்லியில் இருப்பது என்பது ஒருவர் 20 சிகரெட்டுகளை குடிப்பதற்கு சமம் என்று மாநில அரசு தெரிவித்தது.சூழ்நிலையின் தீவிரத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.ஆனால்,நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

எனவே,அவசர நடவடிக்கைகளை எப்படி எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்?,AQI (காற்றுத் தரக் குறியீடு) அளவைக் குறைப்பதற்கான உங்கள் திட்டம் என்ன?,மத்திய,மாநில அரசுகளின் பொறுப்பைத் தாண்டி இந்த சிக்கலைப் பாருங்கள்,இதற்காக தேவைப்பட்டால் 2 நாட்களுக்கு பொது முடக்கத்தை அறிவியுங்கள்”,என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியதாவது:”கடந்த சில நாட்களாக டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாபில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதே காரணம்.இதனை அந்த மாநில அரசு தடுக்க வேண்டும்”, என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி அமர்வு:”விவசாயிகள் மீது ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்?,அவர்களால் குறிப்பிட்ட அளவுதான் காற்று மாசு ஏற்படுகிறது.ஆனால்,கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது என கவனித்தீர்களா?,மேலும்,காற்று மாசுபாடு தொடர்பான மற்ற காரணங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?,டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது?,மேலும்,எங்கள் வீடுகளில் கூட நாங்கள் முகமூடி அணிந்திருக்கிறோம்.டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?,அடுத்த 2-3 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளது.