அசாமில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு – 2 பேர் கைது...!

Two people have been arrested in Assam after an elephant was electrocuted.

அசாம் மாநிலத்தில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் மாவட்டத்தின் மிர்சா எனும் பகுதியில் நெல் வயலைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த மின்சார வேலியில் உரசிய யானை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இந்த யானை உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வன அதிகாரிகள் நெல் வயலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த மின்கம்பிகளை அகற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். இந்த யானை ஏற்கனவே முதிர் வயதானது எனவும், இது நெல் வயலில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தான் உயிரிழந்தது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.