“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?
என்னுடைய கணவரைக் கொன்றுவிட்டீர்கள், தயவு செய்து என்னையும் கொன்றுவிடுங்கள் என தான் கெஞ்சியதாக சம்பவத்தில் உயிரிழந்தவருடைய மனைவி கண்ணீருடன் பேசியுள்ளார்.

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரையும், அவருடைய உறவினர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சுநாத்தின் மனைவி, இந்தத் தாக்குதலின் போது நடந்த கொடூரமான அனுபவத்தை கண்ணீர் மல்கப் பகிர்ந்து கொண்டார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது ” என்னுடைய கண் முன்னே என் கணவரைக் கொன்றுவிட்டீர்கள், தயவு செய்து என்னையும் கொன்றுவிடுங்கள் என்று நான் தீவிரவாதிகளிடம் மனமுருகி மன்றாடினேன். ஆனால், அவர்கள் என்னைப் பார்த்து, ‘நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம். இங்கு நடந்தவற்றை நீ உயிருடன் இருந்து பிரதமர் மோடியிடம் போய்ச் சொல்ல வேண்டும்’ என்று கூறினர்.” இந்த வார்த்தைகள் அவர்களின் கொடூரமான மனநிலையை காட்டியது.
இந்தச் சம்பவம், பயங்கரவாதத்தின் மனிதாபிமானமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஜம்மு – காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.