கடன் தொல்லையால் நேர்ந்த விபரீதம்.! மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்.!

கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37).ஓட்டல் நடத்தி வந்த இவருக்கு மயூரி (27) மற்றும் ஆதித்யா, அக்ஷய் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஓட்டலை நடத்த பலரிடமும் அதிகம் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி செலுத்த இயலாமல் இருந்த சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஓட்டலை திறக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த அமோல் நேற்று ஒரு விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.
ஆம், நேற்று இரவு அமோல் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கழுத்து நெரித்து கொன்றுள்ளார். அதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்த உறவினர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடன் தொல்லையால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.