நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவை தொகுதிகள் காலியாக உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்களது வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரஸும் அறிவித்து வருகிறது.
அந்தவகையில், இன்று காலை மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. இதில் குறிப்பாக, மீண்டும் ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி போட்டி!
இந்த நிலையில், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில், குஜராத்தில் 4 மாநிலங்களவை தொகுதி வேட்பாளர்களும், மகாராஷ்டிராவில் 3 மாநிலங்களவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார். இதுபோன்று, சமீபத்தில் காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் அதே மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
ஜேபி நட்டாவைத் தவிர, குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கோவிந்த்பாய் தோலாக்கியா, மாயன்பாய் நாயக் மற்றும் ஜஷ்வந்த்சிங் பர்மர் ஆகியோரை பாஜக அறிவித்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவை பொறுத்தவரை, அசோக் சவானை தவிர, பாஜக சார்பில் மேதா குல்கர்னி மற்றும் அஜித் கோப்சாடே ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
unknown node