முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது...மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரங்கள் குறித்து காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது என யோகி ஆதித்தியநாத் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.

Mamata Banerjee Yogi Adityanath

உத்திர பிரதேஷ் :மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு வங்க முதல்வரை கடுமையாக சாடி சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” மதச்சார்பின்மை என்ற பெயரில், கலவரக்காரர்களுக்கு அமைதியின்மையை உருவாக்க முழு சுதந்திரத்தையும் மேற்கு வங்கத்தில் அரசு  வழங்கியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது, ஆனால் அங்கு அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இந்த மாதிரியான சம்பவங்களை பார்த்துக்கொண்டு முதல்வர் மம்தா அமைதியாக இருக்கிறார். இப்படியான சம்பவங்கள் நடக்கிறது என்றால் இத்தகைய அராஜகத்தை அரசு உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆனால், அரசாங்கம் அதனை செய்ய தவறிவிட்டது.

அதே சமயம் ” அந்த பகுதியில் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்தியப் படைகளை அனுப்பியதற்காக அங்குள்ள நீதித்துறைக்கு நான் நன்றி கூறுகிறேன். முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரங்கள் குறித்து காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாடி கட்சியும் அமைதியாக இருக்கிறது” எனவும் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

மேலும், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.  இந்த சூழலில், முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நிலைமை சீரடைந்து வருவதாகவும் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் காவல்துறை தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.