மும்பை :கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுத்தது வருகிறது.
இப்படியான பரபரப்பான சூழலில் இது குறித்து அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இது குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று மே 1 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றWAVES (World Audio Visual Entertainment Summit)உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதல் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” பஹல்காம் தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற, பயங்கரமான செயல். இது நமது மதிப்புகளுக்கு எதிரான தாக்குதல். இந்த தாக்குதல் சம்பவம் காஷ்மீரின் அமைதி மற்றும் சுற்றுலாத் துறையை முற்றிலும் பாதித்தது எனக்கு வேதனை அளிக்கிறது.
ஆனால், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும். பிரதமர் மோடி ஒரு போராளி. அவர் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர். எனவே, இந்த நெருக்கடியை அவர் திறம்பட கையாள்வார், ஜம்மு-காஷ்மீரில் அமைதியை மீட்டெடுப்பார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர் நிச்சயமாக பதிலடி கொடுப்பார்” எனவும் ரஜினிகாந்த் மோடியை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் ” பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்த மாநாடு ஒத்திவைக்கப்படலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால், எனக்கு மோடியின் தலைமையில் முழு நம்பிக்கை இருந்தது. இந்த மாநாடு நடப்பது நமது பிரதமரின் உறுதியையும், நாட்டின் மன உறுதியையும் காட்டுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக நாடு ஒற்றுமையாக நிற்க வேண்டும். இந்தியா தனது எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது” எனவும் ரஜினிகாந்த் பேசினார்.
