பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!
பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு எடுக்க மறுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும், இத்தாக்குதலை அடுத்து வெளியூரில், வெளிமாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பொதுநல மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், இந்த வழக்கு விசாரணை நமது படைகளுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். இம்மாதிரியான வழக்குகளை பதிவு செய்யும் போது பொறுப்புடன் இருக்க வேண்டும். இந்த நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை உங்களுக்கும் இருக்கிறது. அதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் நீதித்துறையின் எல்லைக்குள் வராது என்பதை தான் தெளிவுபடுத்துவதாக கூறினார். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எப்போதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் நிபுணர்களாக மாறினர்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
அந்த அமர்வில் இருந்த நீதிபதி என்.கே. சிங் கூறுகையில், காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீங்கள் உங்கள் மாநில உயர்நீதிமன்றங்களில் முறையிடலாம். மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மாநில உயர்நீதிமன்றங்கள் தான் விசாரணை மேற்கொள்ளும் என கூறினார். பின்னர் பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.