கே.சி.வீரமணியின் ஊழல்களை விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி

Minister Murthy has announced that a committee will be set up soon to probe the corruption of former minister KC Veeramani.

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

ஜோலார்பேட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பணம், நகை, முக்கிய ஆவணங்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட 9 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

மேலும், கே.சி.வீரமணியின் வீட்டில் மணல் கொட்டப்பட்டிருப்பது குறித்து கனிம வளத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் கொடுத்தது. அதன்படி, கே.சி.வீரமணி வீட்டிற்குச் சென்ற கனிமவளத்துறை அதிகாரிகள், மணலை அளவீடு செய்தனர். அப்போது, 551 யூனிட் மணல் இருப்பதும் அதன் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் என்றும் திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை அளித்திருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி அரசுக்கு வரி கட்டமானால் ஏமாற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.