கடும் ஷாக்! வரலாற்றில் முதல் முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை!

1920ம் ஆண்டில் ஒரு சவரன் ரூ.21 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.1 லட்சத்தைக் கடந்தது

Gold Price Today

சென்னை ஆபரணத் தங்க விலை இன்று வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. காலை வர்த்தகத்தில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில், பிற்பகல் மேலும் ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.1,00,120-க்கும், கிராமுக்கு ரூ.12,515-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் மொத்தம் ரூ.1,160 உயர்வு ஏற்பட்டுள்ளது. 1920-ஆம் ஆண்டு ஒரு சவரன் ரூ.21-ஆக இருந்த தங்க விலை, 105 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தங்க விலை 186% உயர்ந்துள்ளது. 2020-ல் சவரன் ரூ.35,000-ரூ.40,000 வரை இருந்தது, இப்போது ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றம், பல நாடுகளின் மைய வங்கிகள் (சீனா, ரஷ்யா, இந்தியா) தங்கத்தை அதிக அளவில் வாங்குவது, அமெரிக்க டாலர் வலுவிழப்பு, பொருளாதார நிச்சயமின்மை ஆகியவை விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.13,593-ஆகவும், சவரன் ரூ.1,08,744-ஆகவும் விற்பனை. டிசம்பர் மாத திருமண சீசன், பண்டிகை தேவை அதிகரித்துள்ளதால் விலை ஏற்றம் தொடர்கிறது. இது நகை வாங்கத் திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகளையும் நடுத்தர மக்களையும் கவலையடையச் செய்துள்ளது. “ரூ.1 லட்சத்தைத் தாண்டியது அதிர்ச்சி” என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.213-ஆகவும், கிலோவுக்கு ரூ.2,13,000-ஆகவும் விற்பனை. தொழில்துறை தேவை அதிகரித்ததால் வெள்ளி விலை உச்சத்தில் உள்ளது. தங்கம், வெள்ளி இரண்டும் உச்சத்தில் இருப்பது முதலீட்டாளர்களை யோசிக்க வைக்கிறது.மொத்தத்தில், தங்க விலை ரூ.1 லட்சத்தைத் தாண்டியது வரலாற்று சாதனை என்றாலும், பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பொருளாதார அறிக்கைகள், உலகளாவிய தேவை அதிகரிப்பால் விலை மேலும் ஏற வாய்ப்பு உள்ளது. வாங்குபவர்கள் ஹால்மார்க் தங்கத்தைத் தேர்வு செய்து, GST 3% சேர்த்து கணக்கிட வேண்டும் என்று வியாபாரிகள் அறிவுறுத்துகின்றனர்.