முதலமைச்சருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.!

AIADMK co-ordinator O. Panneerselvam insisted that the chief minister should ensure that corona restrictions are followed.

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றப்படுகிறதா என முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் அறிக்கையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும், தடுப்பூசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்த நிலையில், அனைத்துக் கடைகளும் குளிர் சாதன வசதி இல்லாது செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டது.

இருப்பினும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதால், அனைத்து சில்லறை விற்பனை கடைகள் முன்பும், கொரோனா பாதிப்பிற்கு முன் இருந்த கூட்டத்தை நெருங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து இருக்கிறது.

சிறப்பு அங்காடிகளில் கொரோனா தொற்றுக்கு முன் இருந்ததைவிட கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு மே மாதம் வெறிச்சோடி கிடந்த தெருக்கள் தற்போது அலைகடல் போல் காட்சியளிப்பதாகவும், வார இறுதி நாட்களில் தங்குமிடங்கள் முழுவதும் நிரம்பி விடுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதன் காரணமாக, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, பொதுமக்களும், பண்டிகைகளை முன்னிட்டு தங்களுக்குத் தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கிச் செல்கின்றனர். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான்.

அதே சமயத்தில், இறங்குமுகமாகவே இருந்து கொண்டிருந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. பண்டிகைக் காலம் என்பதால், பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. செப்டம்பர் 1ல் 1,509 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். ஆனால், 23ம் தேதி 1745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள், இதில் உடனடியாக தலையிட்டு, அரசு விதித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் கூட்டம் அலை மோதாமல் இருப்பதை கண்காணிக்கவும், முகக் கவசம்,சமூக இடைவெளியை உள்ளிட்டவரை பின்பற்றுதல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் , உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி, ஏற்ற இறக்கமாக உள்ள கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையினை காண வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் துணை முதல்வர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

unknown node