நெல்லை...கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நாளை காலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

orange alert rain

திருநெல்வேலி :தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த சூழலில், இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று முதல் நாளை காலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு  இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று மிகவும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி கொட்டாரத்தில் கடந்த 2 மணி நேரத்தில் 16 செ.மீ மழையும், மைலாடியில் 11 செ.மீ மழையும், தக்கலையில் 8.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், நாளை சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.