விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ட்வீட்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற தி.மு.க, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி. இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும் தவறு என இதன்மூலம் இப்போது தி.மு.க ஒப்புக்கொள்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்றைக்கு, ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்று சொன்ன எங்களைப் போன்றவர்களைப் பார்த்து, பா.ஜ.க.வைக் கண்டு பயப்படுகிறார்கள்’ என்று தி.மு.க.வினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சித்தார்கள். அப்படியென்றால், இப்போது பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் பார்த்து தி.மு.க பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்றும் தெரிவித்துள்ளார்.
unknown node