”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!
வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம், வைகோ தன்னை “துரோகி” எனக் கூறி சிறுமைப்படுத்தியதாக மல்லை சத்யா குற்றம்சாட்டியுள்ளார். 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்விக்குட்படுத்தும் வகையில் வைகோவின் இந்தக் குற்றச்சாட்டு அமைந்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவை முன்னிறுத்தும் வாரிசு அரசியல் மற்றும் கட்சியில் நீண்டகால உழைப்பை அவமதிக்கும் செயல்கள் குறித்து மல்லை சத்யா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், கட்சியில் பிளவு ஏற்படலாம் எனவும் சில ஊடகங்கள் அலசியுள்ளன.
சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் ஆக.2 காலை 9 முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதம் மக்களிடம் நீதி கேட்கும் வகையில் அடையாளப் போராட்டமாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.