மனசாட்சி இல்லாதவர்கள் கூட அண்ணாமலையை போல் பேச மாட்டார்கள் – அமைச்சர் சேகர்பாபு

Minister Sekarbabu responds to BJP state leader Annamalai's comment on Tamil Nadu police.

தமிழக காவல்துறை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்.

சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை. டிஜிபியின் கையில் இருந்து காவல்துறை நழுவிவிட்டது. ராணுவ வீரர்களின் மரணம் குறித்து தவறான கருத்தை பேசியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளோம். எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகி கொண்டியிருக்கிறது.

சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி. காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் வாயில் முன்பாக ஜதி பல்லக்கை அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட தமிழக காவல்துறைக்கு பல்வேறு இடங்களில் பாராட்டு கிடைத்தது. காவல்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சான்று. தமிழக காவல்துறை குறித்து மனசாட்சி இல்லாதவர்கள் கூட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை போல் பேச மாட்டார்கள் என பதிலளித்துள்ளார்.

இதனிடையே பேசிய அவர், பாரதியாரின் படைப்புகளை டிஜிட்டல் வடிவில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும். அனைத்து தரப்பினர் பின்பற்றும் அளவிற்கு முதலமைச்சரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வசைபாடுபவர்களும் பாராட்டும் அரசாக செயல்படுகிறோம் என்றும் தெரிவித்தார்.