“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!

என் மீது அவதூறு பரப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று ஜி கே மணி வேதனையுடன் பேசியிருக்கிறார்.

GK Mani - Anbumani Ramadoss

சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு ராமதாஸ் பொருளாளர் உள்ளிட்டோரை நீக்குவதும் ஆலோசனை நடத்துவதும் பாமக பிளவை நோக்கி செல்வதை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாமக தலைவர் அன்புமணி மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இரண்டாம் நாளாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இருவருக்கிடையே சண்டை வந்தற்கும், இப்பொது கட்சி இந்த அவல நிலையில் இருப்பதற்கு காரணம் கட்சியின் கெளரவத் தலைவராக உள்ள ஜி.கே.மணி தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஜி.கே.மணி.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ”நிர்வாகிகளை மாற்ற வேண்டாம் என ராமதாஸிடம் முறையிட்டு வருகிறேன். பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு நான் காரணமா? இவ்வாறு கூறுவது அபாண்டமானது. பல ஆண்டுகளாக கட்சியில் உள்ள நான், கட்சி சிதற வேண்டும் என நினைப்பேனா? கால சூழலால் பாமகவில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாம் என ராமதாஸிடம் வற்புறுத்தினேன். கடந்த வியாழனன்று அவர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டோம். தந்தையும், மகனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், இருவரிடமும் பேசி வருகிறேன். உயிர் போகும் வரை சரியாக வாழ வேண்டும் என நினைப்பவன் நான்.

என்ன சொல்றதுனே தெரியல, மன உளைச்சலில் இருக்கேன். மனசுக்கு கஷ்டமாகவும், வேதனையாவும் இருக்கு ராமதாஸும் அன்புமணியும் சந்தித்து பேச வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பம். நான் ராமதாஸிடம் பலமுறை சொல்லி விட்டேன்.

எனக்கு இருக்கும் வேதனை, மன உளைச்சலை உங்களிடம் குமுறுகிறேன். உங்க கிட்ட இதை சொல்ல கூடாது இருந்தாலும் நான் சொல்லுகிறேன், ‘ஒன்று உங்களுக்கும், எனது குடும்பத்திற்கும், நாட்டு மக்களுக்கு தெரியாமல், எங்கயாவது சென்று விட வேண்டும். இல்லையெனில், நான் உயிரோடு இருக்க கூடாது’. இந்த இரண்டு தான் முடிவு என்றேன். என் மீது அவதூறு பரப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்