சென்னை :சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்வு ஏற்பட்டு வருவதால், சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்களுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், டாலர் மதிப்பு மாற்றம் ஆகியவை தங்க விலையை பாதித்து வருகின்றன.
இந்தச் சூழலில் இன்று (ஜனவரி 9) தங்க விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது.இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த தங்க விலை தற்போது மீண்டும் உயர்வு திசையில் செல்கிறது.
இந்த உயர்வு தங்க நகை வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.தங்கத்துடன் போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று சற்று குறைவு கண்டுள்ளது. சென்னை சில்லறை சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.268க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி (பார் வெள்ளி) ரூ.2,68,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி நகை மற்றும் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்தக் குறைவு சிறிது நிவாரணமாக அமைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கங்கள் தொடர்வதால், நகை வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. பண்டிகை மற்றும் திருமண சீசன் நெருங்குவதால் தேவை அதிகரித்துள்ள நிலையில், விலை உயர்வு பலரையும் பாதித்துள்ளது. வல்லுநர்கள் தங்க விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். வாங்குபவர்கள் சந்தை நிலவரத்தை கவனித்து முடிவு எடுப்பது நல்லது.
