மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 ரூபாய் உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold price rises

சென்னை :சென்னையில் இன்று (நவம்பர் 10, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வார தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த உயர்வு, தங்க நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த விலை, தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது.

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பிறகு விலை சரிவைச் சந்தித்தது. அக்டோபர் 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது, 28-ஆம் தேதி ரூ.2,200 குறைந்து ரூ.89,000-க்கும் கீழே சென்றது. நவம்பர் 6-ஆம் தேதி ஒரே நாளில் இரு முறை உயர்ந்து சவரன் ரூ.90,560-ஆக இருந்தது.

நவம்பர் 7-ஆம் தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-ஆகவும், 8-ஆம் தேதி ரூ.240 உயர்ந்து ரூ.90,400-ஆகவும் இருந்தது. நேற்று (நவம்பர் 9) விலை மாற்றமின்றி ரூ.90,400-ஆகவே இருந்தது. இன்று திடீரென ரூ.880 உயர்வு ஏற்பட்டு ரூ.91,280-ஆக உயர்ந்துள்ளது. இது திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்தையொட்டி நகை வாங்குவோருக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.167-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,67,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை சீராக இருந்த நிலையில் இன்றைய உயர்வு குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலர் மதிப்பு, பங்குச் சந்தை நிலவரங்கள் ஆகியவை இந்தியாவில் தங்க விலையை நேரடியாகப் பாதிக்கின்றன. தங்கம் விலை உயர்வு தொடர்ந்தால் நகை வாங்குவோர் எண்ணிக்கை குறையலாம் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். விலை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வாங்குமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.