தென்காசியில் விடாமல் கொட்டும் கனமழை.. அருவிகளில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்!

தென்காசி மாவட்டத்தில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவி தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Courtallam

தென்காசி:தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று பெய்ய தொடங்கிய மழை, இன்றும் விடாமல் பெய்து வருகிறது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 31 செ.மீ மழை, செங்கோட்டையில் 24 செ.மீ, தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவி தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

unknown node

இதில், குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2 பாலங்கள் உடைந்திருக்கிறது. அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோயிலை தாண்டி உள்ள கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும், தென்காசி வாசுதேவநல்லூர் மருதநாச்சியார் புரம் கிராமத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளது.

unknown node

நேற்றைய தினமே, தொடர் மழையின் காரணமாக, மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் குளிக்க, தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தனர்.

உதவி எண்கள்

இந்த நிலையில், கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1077 என்ற கட்டணமில்லா எண், 7790019008 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 04633 – 290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாமென மாவட்ட ஆட்சியர் மல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.